சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கான சேவை தொடரும் - ஆளும் கட்சி தெரிவிப்பு
சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவையை சிறந்த முறையில் தொடர பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படும் என்கிறார் பொதுஜன பெரமுனவின் தவிசாளரும், வெளிவிவகாரத்துறை அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் (G. L. Peiris)
ஐந்து வருட காலத்திற்குள் தேசிய தேர்தல்களில் வெற்றிப் பெற்ற பொதுஜன பெரமுன நிலைத்து நிற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஐந்தாண்டு நிறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன மக்களின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. கொவிட் தாக்கத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் முன்னேற்றும் சவால் அரசாங்கத்தின் முன்னே உள்ளது என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.