மன்னார் போராட்டத்தை தொடர்வதற்கான பேச்சுவார்த்தை! எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு
மன்னாரில் (Mannar) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது குறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றவர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டத்தை குறித்த காலப்பகுதிக்குள் கைவிடுமாறு கோரி அரசாங்க அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் தீவு மக்கள் சுழற்சி முறையில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தியோபூர்வ கடிதம்
இந்தநிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்றுமுன் தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். இவ் விசேட சந்திப்பின் உத்தியோபூர்வ கடிதம் நேற்று(14) மாலை மன்னார் பிரஜைகள் குழு தலைவரிடம் மன்னார் அரசாங்க அதிபர் கையளித்தார்.
காற்றாலை மின்சாரம், கனிம மணல் அகழ்வை நிறுத்தக் கோரி முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் மன்னார் நகர மத்திய சுற்று வட்ட பிரதான வீதி பகுதியில் 12 நாளாக நேற்று (14) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் தற்காலிகமாக ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதுடன் குறித்த காலத்தில் திட்டம் தொடர்பில் சாதகமான மற்றும் பாதகமான அறிக்கையொன்றை தயாரிப்பதற்கு மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்குமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இறுதி முடிவு
இந்தத் தீர்மானம் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் எரிசக்தி அமைச்சினூடாக நேற்று (14) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த கடிதத்தை நேற்று பிற்பகல் சுமார் 5. 50 மணி அளவில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பிரதிநிதிகள், மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ். மாக்கஸ் அடிகளாரிடம் அரச அதிபர் கையளித்தார்.
குறித்த கடிதத்தை பெற்றுக் கொண்ட மார்க்கஸ் அடிகளார் போராட்டத்தை கை விடுவது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
