கொரோனா தொற்று தகவல்களை அரசாங்கம் மறைக்கிறதா? ரவி குமுதேஷ் குற்றச்சாட்டு
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெறுகின்ற அளவிற்கு வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்ற நிலையில், அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து தகவல்களை மறைப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அதிகாரிகளின் தகவல்களை தணிக்கை செய்வதாக, பொது சேவையில் உள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்கப்படுவதன் ஊடாக, கொரோனா தொற்றுநோயின் உண்மையையும் கட்டுப்பாட்டையும் மறைக்க சுகாதார அமைச்சின் செயலாளர் முயற்சி செய்வதாக, வைத்திய ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வார இறுதியில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சுகாதார கொள்கைகளை விமர்சித்து, ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென காதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாகாண சுகாதார செயலார்கள், சுகாதார அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவங்களினதும் பிரதானிகள், அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிரதேச சுகாதார பனிப்பாளர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் அறிவித்தல் ஒன்றை விடுத்து அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது சுகாதார சேவையில் கடுமையான அதிருப்தியை உருவாக்கக்கூடும் என ரவி குமுதேஷ் எச்சரித்துள்ளார். பல பிரச்சினைகள் மற்றும் தேவைகள் காணப்படுகின்ற போதிலும், களத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சுகாதார ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, குறைந்தது இதுத் தொடர்பில் ஒரு கலந்துரையாடலைக்கூட நடத்தாமல் அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதை அவர் விமர்சித்துள்ளார்.
தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தம்மை தூண்டிவிட வேண்டாமென வலியுறுத்தியுள்ள ரவி குமுதேஷ், சுகாதார அமைச்சு விதித்துள்ள இந்தத் தடையை நீக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பல்வேறு நபர்களின் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது எனவும், அவர்களின் அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடக்கூடாது எவும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பிரதானி ஊடகவியலாள்களிடம் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில ஊடகங்கள் அதை இன்றுவரை செயற்படுதுவதை தன்னால் காணக்கூடியதாக இருப்பதாக ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து வெளியிடுவதற்கு தடை விதிப்பதன் ஊடாக கொடிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியுமா என ரவி குமுதேஷ், சுகாதார அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.