பிணவறைகளிலும் இடப்பற்றாக்குறை ஏற்படலாம்!! விசேட மருத்துவ நிபுணர் அஜித் தென்னகோன் தகவல்
எதிர்வரும் நாட்களில் கொரோனாவால் இறக்கும் நபர்களில் உடல்கள் குவியும் நிலைமை ஏற்படக் கூடும் என கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி விசேட மருத்துவ நிபுணர் அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், கொரோனாவால் இறக்கும் நபர்களில் உடல்கள் குவியும் நிலைமை தற்போது ஏற்படவில்லை என்றாலும் எதிர்வரும் நாட்களில் அந்த நிலைமை ஏற்படக் கூடும் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்றாளர்கள் வீடுகளில் இறப்பது அதிகரிக்கலாம் எனவும் மரணங்களின் மரண விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை அவற்றை பிணவறையில் வைக்க வேண்டும் என்பதால், குளிரூட்டப்பட்ட கொள்கலன் பெட்டிகள் சில ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வீடுகள் மற்றும் மருத்துவமனையில் ஏற்படும் மரணங்கள் தொடர்பான பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கும் வரை உடல்களை பிணவறைகளில் வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதனால், இடவசதிகள் தொடர்பான பிரச்சினை ஏற்படக் கூடும் எனவும் அஜித் தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.