கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க இடமின்றி தவிக்கிறது அமெரிக்கா
அமெரிக்காவின் பல மாகாணங்களில் புதிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. வீரியமிக்க கொரோனா பரவ தொடங்கியதையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவிலும் பைசர், மொடேர்னா என்ற இரு வகையான தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும் கூட உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
நேற்று ஒரு நாள் மட்டும் அமெரிக்காவில், இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது. 2,27,000 பேர் நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 3,50,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் நிரம்பி வழியும் உயிரிழப்புகளால், இறந்த உடல்களை புதைப்பதற்கு கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தும் கூட இங்கிலாந்து - அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த செய்தி அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.