முஸ்லிம்களின் மரணத்தில் சந்தேகம்! புதிய சர்ச்சையை கிளப்பும் அஸாத் சாலி
கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் முஸ்லிம் மரணங்களில் பாரிய சந்தேகம் இருக்கின்றது. அதனால் இதுதொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா தொற்றில் மரணித்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக இருப்பது தொடர்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 22மில்லியன் சனத்தொகையைக்கொண்ட இலங்கையில் சுமார் 10 வீதமே முஸ்லிம்கள். ஆனால் கொரோனா தொற்றில் இலங்கையில் மரணித்தவர்களில் மொத்த எண்ணிக்கையில் 10வீதம் கொண்ட முஸ்லிம் சமூகத்தில் இருந்து 80 வீதமான கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் இந்த மரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என அரசாங்கத்தை கேட்கின்றோம். அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
ஆனால் அவர்கள் அங்கு கொண்டு சேர்க்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு அங்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் இடம்பெறுவதில்லை என அங்கு சென்றுவந்தவர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் கொரோனா தொற்றை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் என்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை என்பவற்றில் முரண்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 14நாட்கள் இருந்துவிட்டு வீடு திரும்பியதுடன் மரணித்த சம்பவங்களும் இடம்பெற்றிக்கின்றன.
எனவே இந்த விவகாரங்களுக்கு பின்னணியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதனால் இதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்றார்.