மருந்து விற்பனையில் பாரிய ஊழல்: இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை
மருந்து விற்பனையில் இடம்பெற்றதாக நம்பப்படும் முறைகேடுகளைப் பற்றி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை நகரில் உள்ள சீனா-இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
சந்தை விலை
சில மருந்து வழங்குநர்கள் சந்தை விலையைவிட நான்கு மடங்கு அல்லது ஐந்து மடங்கு அதிக விலையில் மருந்துகளை விற்பனை செய்துள்ளதாகவும், இது தொழில் நெறிகளுக்கு எதிரானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளுக்கான இந்த அதிக விலை, அரச மருந்துத் தயாரிப்பு நிறுவனமான அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபத்தின் இலாப வரம்பை கூட கடந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்கமான நடைமுறை
வழக்கமான நடைமுறையைப் போலவே, மருத்துவர்கள் வெளிப்புற வழங்குநர்களிடமிருந்து மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை பொருட்களை பரிந்துரைக்க சுதந்திரம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட மருந்து வேண்டுமென்றே அதன் உண்மையான சந்தை மதிப்பை விட மிக அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் அண்மைய ஊழல் பிரச்சினை எழுந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்ட விதிமுறைகளுக்குள் அவசர கொள்முதல் செய்பவை ஊழலுக்கு அடிப்படை அல்ல ஆனால் சந்தை விலையை விட பல மடங்கு அதிகமாக நிர்ணயித்து சுரண்டல் செய்யும் போது, அது ஒரு விசாரணைக்குரிய பிரச்சனையாக மாறுகிறது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
