சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பதவி : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானம் நேற்று (18) தினம் எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் பெறப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக நிலந்த ஜயவர்தன குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடுக்க நடவடிக்கை
விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதன் தலைவர் லலித் ஏகநாயக்க தலைமையில் நேற்று (18) காவல்துறை ஆணைக்குழு கூடியபோது, நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிகப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடந்த நேரத்தில் நிலந்த ஜயவர்தன, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக இருந்தார்.
தகவல் கிடைத்த போதிலும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்கிலும் அவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
