அரசியலமைப்பு, மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த தமிழ் தலைமைகள்
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ஆறு கட்சிகளைக் கொண்ட கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துதல், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வு காண எதிர்பார்ப்பதாக கூறினார்.
புதிய சமூக ஒப்பந்தம்
புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி தரப்பு , அது அவசரமாக கொண்டுவரப்படக் கூடாது என்றும், அனைத்து இன மக்களினதும் ஒப்புதலுடன் உருவாக்கப்படும் மக்கள் ஒப்பந்தமாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அரசியலமைப்பு திருத்தப்படுவதோடு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.
அதேவேளை, அவசர திருத்தத்தை விட அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய சமூக ஒப்பந்தத்தை உருவாக்குவதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






