இந்தியாவின் மை லாய் எனப்படும் வல்வெட்டித்துறைப் படுகொலை…
வரலாறு சில இடங்களின் பெயர்களை மனிதகுலத்தின் மனச்சாட்சியாகப் பாதுகாத்து விடுகிறது. வியட்நாமின் மை லாய் என்பதும் அத்தகைய ஒரு பெயர்தான்.
அப்படித்தான் ஈழத் தமிழர்களின் வரலாற்றிலும் வல்வெட்டித்துறை என்பதும் ஒரு மை லாய் போலவே ஆறாவடுவென நிலைத்துவிட்டது.
மை லாய் கிராமத்தில்…
1968 மார்ச் 16 அன்று வியட்நாமின் சோன் மை கிராமத் தொகுதியில் உள்ள மை லாய் கிராமத்திற்குள் நுழைந்த அமெரிக்க இராணுவ வீரர்கள், ஆயுதமேந்தியவர்களையன்றி, பொதுமக்களைத்தான் கண்டார்கள்.
ஆனாலும் இலங்கையில் போலவே அவர்களுக்கும் பொதுமக்களும் எதிரிகளெனத் தோன்றினர். சில மணி நேரங்களுக்குள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோரை அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தைகள் கூட உயிருடன் விடப்படவில்லை. வீடுகள் எரிக்கப்பட்டன.
முற்றாகக் கிழிந்த இராணுவ ஒழுக்கம்
மனித நாகரிகத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த இராணுவ ஒழுக்கம் அங்கே முற்றாகக் கிழிந்தது. இருபத்து ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஆகஸ்ட் மாதத்தில், வல்வெட்டித்துறையிலும் இதேபோலவே ஒரு நிகழ்வு வரலாற்றில் மீண்டும் நிகழ்கிறது.
இம்முறை அமெரிக்க இராணுவம் அல்ல. அமைதியை நிலைநாட்ட வந்ததாக அறிவிக்கப்பட்ட இந்திய அமைதிப்படையால் அக் கொடுமை நிகழ்த்தப்பட்டது. இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு நாடுகளில் நடந்தவை.
வெவ்வேறு அரசியல் சூழல்களில் நிகழ்ந்தவை. ஆனால் அவற்றின் மையத்தில் இருந்த தர்க்கம் ஒன்றே. சில இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டால், அதற்குப் பழிவாங்க ஒரு முழு கிராமத்தையும் தண்டிக்கலாம் என்ற ஆக்கிரமிப்பு மனநிலை. அழிப்பு மனநிலை.
இந்தப் பழிவாங்கலையே அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் இலங்கை இராணுவமும் கொண்டுள்ளது.
வல்வைப்படுகொலை
1987 இந்திய–இலங்கை ஒப்பந்தமானது, ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு, அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு ஆகியவற்றின் வாக்குறுதியுடன்தான் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் சில மாதங்களிலேயே அந்த வாக்குறுதி போரின் கொடுமுகமாக மாறிற்று. இந்திய அமைதிப்படை, தமிழர்களைக் காப்பாற்ற வந்த படையிலிருந்து, தமிழர் குடியிருப்புகளை முற்றுகையிடும் இராணுவமாக மாறியது.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை என்று பல இடங்களில் பொதுமக்களின் வாழ்க்கை இராணுவ நடவடிக்கைகளினால் பலியிடங்களாகின.
1989 ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தியப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், வல்வெட்டித்துறை முழுவதும் கூட்டுத் தண்டனைக்குள்ளாக்கப்பட்டது.
வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. வணிக நிலையங்கள் அழிக்கப்பட்டன. ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல குடும்பங்கள் ஒரே நாளில் தங்கள் உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்தன.
அமெரிக்காவும் இந்தியாவும்
மை லாய் படுகொலையின் பின்னர் அமெரிக்க அரசு ஆரம்பத்தில் உண்மையை மறைத்தது. ஆனால் வீரர் ரொனால்ட் ரைடன்ஹவரின் கடிதங்கள், பத்திரிகையாளர் சேமூர் ஹெர்ஷின் விசாரணைகள், புகைப்பட ஆதாரங்கள், உலக ஊடகங்களின் அழுத்தம் ஆகியவை அந்த மூடிமறைப்பை உடைத்தன.
உலகம் அதிர்ந்தது. அமெரிக்க இராணுவத்தின் ஒழுக்கத்தின் முகம் உலகிற்குத் தெரிய வந்தது. நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றன. அவை முழுமையான நீதியை வழங்கவில்லை என்றாலும், குற்றம் நிகழ்ந்தது என்பதை மறுக்க முடியாத வரலாற்றுப் பதிவை உருவாக்கின.
ஆனால் வல்வெட்டித்துறையின் கதைக்கு அந்த அளவிலான உலகச் செவியே கிடைக்கவில்லை என்பதே இங்கு வேதனையானது. இந்தியாவின் ஜனநாயக முகமும், பிராந்திய வல்லரசு அரசியலும், இலங்கையின் உள்நாட்டுப் போரின் சிக்கல்களும் இப் படுகொலையின் கோரத்தை மறைக்கும் இந்தியாவின் பொறுப்புக்கூறல் மறுப்புக்கு சாதகம் ஆகிவிட்டது.
உயிரிழந்த தமிழர்கள் சர்வதேச அரசியலில் பேசப்படாத புள்ளிவிவரங்களாகவே விடப்பட்டனர்.
உலகம் துணைநிற்க மறுத்தது
இதுவே மை லாய்க்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாடு யாதெனில், மை லாய்க்கு உலகம் சாட்சி நின்றது. ஆனால் வல்வெட்டித்துறைக்கு படுகொலையில் உயிர்தப்பிய மக்களே சாட்சி.
மை லாய்க்காக உலகப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் எழுதப்பட்டன. வல்வெட்டித்துறையின் வரலாறு இன்னும் தமிழர்களின் நினைவிலும் சில ஆவணங்களிலும் மட்டுமே உயிர்வாழ்கிறது.
மை லாய் அமெரிக்க இராணுவத்தின் கறைபடிந்த அத்தியாயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் வல்வெட்டித்துறை, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரலாற்றில் இன்னும் பேசப்படாத வெற்றிடமாகவே இருக்கிறது.
இந்த ஒப்பீடு இரண்டு படுகொலைகளின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகிற நோக்கம் கொண்டதல்ல. ஒரு அரசின் ஆயுதங்கள் எப்போது மனிதத்தன்மையை இழக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காகவும் இராணுவம், ஒரு கட்டத்தில் ஒரு இனத்தின் பொதுமக்களையே எதிரியாகக் காணத் தொடங்கினால், அங்கே மனிதாபிமானத்தின் வீழ்ச்சிதான் நிகழும் என்பதற்கும்கூட இவ்விரண்டு படுகொலைகளும் சாட்சியாகும்.
உண்மையை ஏற்றுக்கொள்ளுதல்
இன்று இந்தியாவானது, உலக அரங்கில் ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது. அந்தக் குரலுக்கு நம்பகத்தன்மை வேண்டுமென்றால், இந்திய அமைதிப்படை இலங்கையில் நிகழ்த்திய மீறல்களையும் அதே நேர்மையுடன் எதிர்கொள்ள வேண்டுமல்லவா?
வரலாற்றை மறப்பது தேசப்பற்ற ஆகிவிடாது. மாறாக பொறுப்பிலிருந்து தப்பித்தலே ஆகும். அதேபோன்று வல்வெட்டித்துறைப் படுகொலையை நினைவுகூர்வது என்பதும் இந்தியாவுக்கு எதிரான ஈழத் தமிழர்களின் அரசியல் அணுகுமுறையல்ல.
மாறாக, இந்திய தேசத்தின் ஜனநாயகத்தின் மனச்சாட்சியையே அழைக்கும் செயலாகும். மை லாய் பற்றிய உண்மையை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டியிருந்தது போல, வல்வெட்டித்துறை பற்றிய உண்மையையும் இந்தியா ஒருநாள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உறுதியாக நம்புவோம்.
நீதியை மறுத்த வரலாறு ஒருபோதும் நிலைபெறுவதில்லை. உண்மையில் வல்வெட்டித்துறையில் சிந்தப்பட்ட இரத்தம் தெற்காசிய அரசியலின் மனச்சாட்சியிலும் இன்னும் உலராத கறையாகவே உள்ளது.
அதனால் அது இந்தியாவின் மை லாய் என வரலாற்றின் பக்கங்களில் மீண்டும் மீண்டும் நினைவில்கொள்ளப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |