பாரிய ஆபத்தில் சிக்கியுள்ள நாடு -முன்னாள் சபாநாயகர் கடும் எச்சரிக்கை
நாட்டின் தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் தன்னிச்சையானதும் முன்யோசனையற்றதுமான தீர்மானங்களால் நாடு பாரிய ஆபத்தில் சிக்கி உள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
நாடு பொருளாதார ரீதியில் முழுமையாக முடங்கும் வகையிலான பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறது. அதேவேளை கொவிட் - 19 வைரஸ் தொற்றானது நாடுமுழுவதும் மிகவேகமாகப் பரவிவருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் தன்னிச்சையானதும் முன்யோசனையற்றதுமான தீர்மானங்களின் விளைவாக விவசாயத்துறை பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது.
விவசாயிகள் அவர்களது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறத்தில் மீனவர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கல்வியைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் உரிமையிலும் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இவ்விடயங்கள் தொடர்பில் நாட்டின் ஆட்சியாளர்கள் விசேட கவனம் செலுத்தவேண்டும். இன,மத,கட்சிபேதங்கள் அனைத்தையும் புறந்தள்ளி நாட்டுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைந்து சரியான தீர்வொன்றைக் கண்டடையவேண்டும்.
நாம் ஏற்கனவே கூறியதுபோல அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் அனைத்து அதிகாரங்களும் தனியொருவரிடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நாட்டின் ஏனைய ஜனநாயகக் கட்டமைப்புக்கள் வலுவிழந்துள்ளன. நாடு மிகமோசமான தொற்றுநோய்ப்பரவலுக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியாமைக்கும் அதுவே பிரதான காரணமாகும்.
நாட்டை இராணுவமயப்படுத்துவதன் ஊடாக கொரோனா வைரஸ் பரவலை இல்லாதொழிக்க முடியாது. மாறாக இவ்வாறான நடவடிக்கைகளால் மக்களின் ஜனநாயக சுதந்திரமே கேள்விக்குள்ளாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.