விகாராதிபதி பதவிப் போட்டி...! தேரர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் - மற்றுமொருவர் கைது
ரிதீமாலியத்த செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார்.
அத்தோடு மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தேரரை வரும் ஆகஸ்ட் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மதியங்கனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல முறைப்பாடுகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விகாரையின் முன்னாள் விகாராதிபதி தேரர் காலமானதைத் தொடர்ந்து, விகாராதிபதி பதவிக்காக அளுகெட்டியாவே சீலவம்ச தேரர் மற்றும் கேசல்போத மேதாங்கர தேரர் ஆகிய இருவருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்துள்ளது.
இதற்கு முன்னரும் இவர்களுக்கிடையேயான மோதல்கள் தொடர்பாக மதியங்கனை காவல் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.

அத்தோடு இரு தரப்பினருக்கும் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனைகளும் (Suspended Sentences) விதிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த புதிய மோதல் வெடித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 24 ஆம் திகதி, தான் விகாராதிபதியாக நியமிக்கப்பட்டதாகக் கூறும் கடிதம் ஒன்றுடன் விகாரைக்கு வருகை தந்த சீலவம்ச தேரர், அங்கு தங்கியிருந்த மேதாங்கர தேரரிடம் விகாரையின் சாவிக்கொத்தைக் கேட்டுள்ளார்.
விசேட விசாரணை
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சீலவம்ச தேரர் மேலும் இரு நபர்களுடன் சேர்ந்து மேதாங்கர தேரரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த மேதாங்கர தேரர் மதியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அராவ பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான சீலவம்ச தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு தாக்குதலுக்கு உதவியதாகக் கூறப்படும் ஏனைய இரு சந்தேகநபர்களும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |