குவைத் மீதான ஈரானின் திடீர் தாக்குதல்...! தொழிலாளி ஒருவர் பலி
குவைத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் இராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்புப் படை
ஈரானில் இருந்து ஏவப்பட்ட 5 ஏவுகணைகளை ஜோர்தானிய வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்திய சில மணி நேரங்களிலேயே குவைத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) இராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், கடலோரக் கண்காணிப்பு மையங்கள் உட்படப் பல இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் (Qeshm) தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக ஈரானின் உத்தியோகபூர்வ ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு எகிப்தின் டமியேட்டா (Damietta) துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு இயற்கை எரிவாயுப் படகுகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனுடன் சவுதி அரேபியாவின் அப்கேக் (Abqaiq) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற குழுக்கள் நடத்தி வரும் இந்தத் தொடர் தாக்குதல்களால் பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், உலகளாவிய எரிபொருள் விநியோகம் மற்றும் பொருளாதாரத்திலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |