மூன்று மாத குழந்தையை விற்று போதைப் பொருள் அருந்திய தம்பதி
பிறந்து மூன்று மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை 7 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து, அந்த பணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திய கணவன்,மனைவியை தாம் கைது செய்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் குருணாகல் நகரில் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக தமக்கு பிறந்த மூன்று மாத குழந்தையை அனுராதபுரத்தை சேர்ந்த தம்பதிக்கு 7 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளனர்.
ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணின் பையில் இருந்த குழந்தையின் ஆடை குறித்து விசாரித்த போது இந்த சம்பவம் பற்றிய தகவல் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
குழந்தையை விற்பனை செய்த பணத்தில் இந்த சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் 30 ஆயிரம் ரூபாவுக்கு ஹெரோயின் போதைப் பொருளை கொள்வனவு செய்துள்ளனர்.
மீதமுள்ள 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை வங்கியில் வைப்புச் செய்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.