பருத்தித்துறை நகரசபை வழக்கு: ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்ற அனுமதி
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு எழுத்தாணை மனுக்களையும் யாழ். மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (18.05.2026) தள்ளுபடி செய்துள்ளது.
இதனுடன், முன்னர் வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவும் இரத்து செய்யப்பட்டதுடன், வடக்கு மாகாண ஆளுநரின் விசாரணையை தொடர அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
நகரசபைக் கட்டளைச் சட்டத்தின் 184ஆம் பிரிவின் கீழ் ஆளுநரின் உத்தரவின்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இடைக்காலத் தடை
பருத்தித்துறை நகரசபையின் மரக்கறிச் சந்தை மாற்றத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது, ஆளுநர் அல்லது உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தல்களை மீறுவதாக கருத முடியாது என்றும், தவிசாளர் சபையின் தீர்மானத்தையே நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையில் இருந்ததால் 184ஆம் பிரிவின் கீழ் விசாரணை நடத்த முடியாது என்றும் மனுதாரர் தரப்பு வாதிட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஆரம்பத்தில் இடைக்காலத் தடையுத்தரவை வழங்கியிருந்தது.
பின்னர் இடம்பெற்ற மேலதிக விசாரணைகளின் போது, வடமாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் அரச சட்டவாதி புவனேந்திரராஜா ஜனந்தன் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தார்.
அவர் சமர்ப்பித்த வாதங்களில், இவ்வகை எழுத்தாணை மனுக்கள் அனுமதிக்கப்படுவது அரச இயந்திரத்தின் செயற்பாடுகளை முடக்கக்கூடும் என்றும், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டுமே தவிர, விசாரணையை ஆரம்பத்திலேயே தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வழக்கின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கடந்த 08.04.2026 அன்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தொடர்பிலும் விவாதம் எழுந்தது.
வர்த்தமானி அறிவிப்பு
வர்த்தமானி அறிவிப்பு அரச இணையத்தளத்தில் வெளியாகும் முன்பே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர் வெளியிட்டு தவிசாளரை ஏளனம் செய்திருந்தமை, அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுவதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.

எனினும், வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னரே அந்த பதிவு இடப்பட்டதாக அரச தரப்பு தெரிவித்தது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வர்த்தமானி வெளியான பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் முன்கூட்டியே தகவலை அறிந்திருந்தார் எனக் கூறுவது நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தும் செயல் எனக் குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன், “நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தியுள்ளனர்” என்ற அரச தரப்பின் வாதம் இடைக்காலத் தடையை நீக்குவதற்காக உத்தியாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினரின் பதிவு அரச இணையத்தளத்தில் வர்த்தமானி வெளியாகும் முன்னரே வெளியிடப்பட்டதாக தாங்கள் தொடர்ந்து நிலைப்பாடு கொண்டிருப்பதாகவும் கூறினார்.
அரசியல் தேவை
இதனுடன், பருத்தித்துறை நகரசபை தவிசாளரை பதவி நீக்க வேண்டிய அரசியல் தேவையினாலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மனுதாரர்கள் கருதுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
விசாரணை அதிகாரி முன்னதாகவே மனுதாரருக்கு அறிவிப்பு வழங்கி, விசாரணையில் முன்னிலையாக போதிய கால அவகாசம் வழங்கியிருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், விசாரணைக்கு சட்ட அடிப்படை இல்லை எனில், அதனை முதலில் விசாரணை அதிகாரியிடம் பூர்வாங்க ஆட்சேபனையாக முன்வைக்கலாம் என்றும், அவ்வாறு முன்வைக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இறுதியாக, அரச தரப்பின் சட்ட வாதங்களையும் சட்ட ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், ஆளுநரின் விசாரணையை தொடர அனுமதி வழங்கி இரண்டு எழுத்தாணை மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, விசாரணை அதிகாரியின் முன்னிலையில் பூர்வாங்க சட்ட ஆட்சேபனைகளை முன்வைப்பது தொடர்பான அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |