காவல்துறை மா அதிபருக்கு நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பிலான விசாரணைகளுக்காக தற்போதைய காவல் துறை மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு(C.D. Wickramaratne) நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ம் திகதி நீதிமன்றத்திற்கு பிரசன்னமாகுமாறு மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாமினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தனவிடம் சாட்சியங்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டதன் பின்னர், தற்போதைய காவல் மா அதிபரிடம் விசாரணைகளை நடத்த எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிஷ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி, காவல் மாஅதிபருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.