போலியான மருத்துவ சான்றிதழை பயன்படுத்தி நாட்டை விட்டு தப்பிச் சென்ற கொரோனா நோயாளி
தனியார் மருத்துவமனை ஒன்றிலிருந்து பெற்ற போலியான பிசிஆர் சோதனை அறிக்கையைப் பயன்படுத்தி கொரோனா நோயாளி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமூடாக தப்பிச் சென்ற அதிர்ச்சி தகவலொன்று வெளியாகி உள்ளது. மஹர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள எந்தேரமுல்லையைச் சேர்ந்த கொவிட்-19 நோயாளி ஒருவரே இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனியார் மருத்துவமனை ஒன்றிலிருந்து இரண்டு முரண்பாடான பி சிஆர் சோதனை அறிக்கைகளை குறித்த நபர் பெற்றுள்ளார்.அதில் ஒன்று கொரோனா தொற்று உள்ளவர் என்றும் மற்றொன்று இல்லையென்றும் அறிக்கைகளில் காணப்பட்டன.
இதனால் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில்(MOH) புதிய பிசிஆர் சோதனைக்கு உட்படுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக மஹர சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் நிஹால் கமகே தெரிவித்தார். இதன் பின் டிசம்பர் 24ஆம் திகதி குறித்த நபர் புதிய பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும் நாட்டை விட்டு வெளியேறும் அனுமதிச் சான்றிதழ் வழங்க பிசிஆர் சோதனை அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 30இல் பெறப்பட்ட அறிக்கை குறித்த நபர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருப்பதை உறுதிப்படுத்தியது. எனவே அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக பொதுச் சுகாதார அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் டிசம்பர் 29ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமூடாக நாட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது என அவர் கூறினார்.
ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட போலியான பிசிஆர் சோதனை அறிக்கையைப் பயன்படுத்தி குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் எனத் தான் நம்புவதாகவும் அவர் இப்பகுதி சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரை இல்லாமல் எப்படி வெளியேறினார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் மிஹார எபா கூறினார்.
இது தொடர்பில் விசாரணை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.