இலங்கையில் புதிய வகை மருந்துக்கு அங்கீகாரம்
கொரோனாவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ரோச் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள REGN-COV2 மருந்தினை இலங்கையில் அவசர நிலைமைகளின் கீழ் பயன்படுத்துவதற்கான அனுமதியை தேசிய மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இலங்கையில் சிறிதளவு முதல் நடுத்தரளவு வரை கொரோனாவைரஸ் நோயினால் பாதிக்கப்படும் புற்றுநோய், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள், சிறுநீரகங்கள் மற்றும் என்புமச்சை மாற்று சத்திரசிகிச்சை, நீரிழிவு, உடற்பருமன் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளர்கள் மற்றும் பாரதூரமான நோய்களைக் கொண்டவர்களுக்கு பயன்படுத்துவதற்காக இந்த REGN-COV2 மருந்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன், பெல்ஜியம், எஸ்டோனா, ஐஸ்லாந்து, செக் குடியரசு மற்றும் இஸ்ரேல் மற்றும் சேர்பியா (ஐரோப்பா தவிர்ந்த) நாடுகளில் இந்த மருந்தை அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலும் பயன்படுத்துவதற்கான அனுமதியை தேசிய மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
அமெரிக்க ஒழுங்குபடுத்துநர்கள் மற்றும் ஐரோப்பிய ஒழுங்குபடுத்தல் குழு ஆகியவற்றினால் பூர்த்தி செய்யப்பட்ட தரவுகள் மற்றும் விஞ்ஞான ரீதியான கருத்துரைப்புகள் போன்றவற்றை கவனத்தில் கொண்டு ஆராய்ந்ததன் பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருந்துப்பொருட்கள் உற்பத்தியில் ஜாம்பவான்களான ரோச் மற்றும் ரிஜெனரோன் ஆகியவற்றினால் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அக்காலப்பகுதியில் அமெரிக்க அதிபராக திகழ்ந்த டொனல்ட் ட்ரம்ப் கொரோனாவைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட போது, அவருக்கு சிகிச்சையளிப்பதற்கான இந்த மருந்து வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், எவ்விதமான பாதிப்புகளுமின்றி, அவர் குணமடைவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.