சீனியின் விலை 120! ஊரடங்குச் சட்டத்தை மறந்து லங்கா ச.தொ.சவில் குவியும் மக்கள்
அம்பாறை - கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள லங்கா ச.தொ.ச விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் சீனி 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது என எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு அத்தியவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில் இந்த நிர்ணய விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அங்கு உள்ளூர் உற்பத்தி பால்மா சில வகைகளின் விற்பனையும் இடம்பெற்றதால் மக்கள் வெள்ளம் லங்கா ச.தொ.ச.வில் குவிந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வந்தாலும் நாட்டின் கொரோனா சூழ்நிலை காரணமாக மக்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் உள்ளதாக கல்முனை லங்கா ச.தொ.ச முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
