தலதா மாளிகை பாதுகாப்பு வலயத்தில் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட பங்களாதேஷ் பிரஜை கைது
ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் ட்ரோன் கமராவை அனுப்பிய சந்தேகத்தின் பேரில் பங்களாதேஷ் பிரஜை ஒருவர் இன்று (05) காலை 8.30 மணியளவில் தலதா மாளிகை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், தான் நடத்தும் யூடியூப் சனலுக்கு உரிய காட்சிகளைப் பெற்றதாக காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார். விகாரைக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமராக்களை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ட்ரோன் கமரா பொருத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி, கமரா மற்றும் சந்தேகநபரின் கடவுச்சீட்டை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் சுற்றுலா கவல்துறை பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இத்தமல்கொட தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.