டேன் பிரியசாத் படுகொலை : பின்னணியில் கஞ்சிபானை இம்ரானா?
டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவரான கஞ்சிபானை இம்ரான் அல்லது வெளிநாட்டில் உள்ள வேறு குற்ற கும்பல் வலையமைப்பால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் நேற்று முன்தினம் (22.04.2025) வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி வீட்டுத் தொகுதியின் 6வது மாடியில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்டார்.
படுகாயங்களுக்குள்ளான டேன் பிரியசாத் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாதாள உலக குழு
இந்நிலையில் குறித்த கொலைச்சம்பவமானது, பாதாள உலக குழுவின் தலைவரான கஞ்சிபானை இம்ரான் அல்லது வெளிநாட்டில் உள்ள வேறு குற்ற கும்பல் வலையமைப்பினால் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதலுக்கு முன், விருந்தில் பங்கேற்ற ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறியிருந்ததாகவும், அவரிடம் இருந்து காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதி கவிசாரணை
டேன் பிரியசாத்தின் சகோதரர் திலின குமார 2022 ஜூலை 25 ஆம் திகதி ஒருகொடவத்தை பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத இருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் தற்போது விசாரணைகளில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அதே குழுவினரே இந்த கொலையிலும் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேன் பிரியசாத், நவ சிங்களே என்ற தேசிய இயக்கத்தின் தலைவராகச் செயல்பட்டவராவார்.
2019 ஆம் ஆண்டு திகன பிரதேசத்தில் இடம்பெற்ற இனவாத கலவரங்களின் போது கைது செய்யப்பட்டிருந்ததுடன், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகல போராட்டங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
