தேசபந்து கைதில் தாமதம்: அரசாங்கத்துடனான டீலா காரணம்!
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் மட்டுமன்றி மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்ய காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று(18.03.2025) இடம்பெற்றது.
இதன்போது, அரசாங்கத்துடனான கொடுக்கல் வாங்கல் காரணமாகவா தேசபந்து தென்னகோனை கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விசேட குழுக்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தேசபந்து தென்னகோன் மட்டுமல்ல, இன்னும் சிலரும் இருக்கிறார்கள், அவர்களை கைது செய்ய காவல்துறை குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நீங்கள் எங்களிடம் சொல்லவில்லையே, பிரசன்ன ரணவீரவுடன் ஏதோ ஒரு டீல் இருக்கிறது என்று. நாங்கள் அவரையும் தேடுகிறோம். செவ்வந்தியையும் தேடுகிறோம். மேலும் உங்களுக்கு பெயர் தெரியாத சிலரையும் தேடுகிறோம்.
காவல்துறை குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கணேமுல்ல சஞ்ஜீவ கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் ஒரு சிறைச்சாலை காவலரும் உள்ளனர்.
கைது நடவடிக்கை
இந்த விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும்போது, அரச இயந்திரத்திற்குள்ளும் அதிகாரிகள் கைது செய்யப்படும் அளவிற்கு விரிவடைந்துள்ளது. காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக சொல்லலாம். அதனால் தப்ப முடியாது.
எங்களுக்கு தெரியாத, காவல்துறைக்கு தெரியாத விடயங்கள் உங்களுக்கு தெரிந்தால், அதை முன்வைப்பதுதான் நல்லது. நிச்சயமாக சட்டம் செயற்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியும்." என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்