அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளே இந்த மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அச்சுறுத்தலில் "உன்னை எங்காவது கண்டால் கொன்றுவிடுவோம். வெளியே சிக்கும் போது உன்னை விடமாட்டோம், கொன்றுவிடுவோம்" என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட நடவடிக்கை
அதிகாரிக்குஎதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த அதிகாரி, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அன்று ஏற்பட்ட அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு கடமைக்குச் சமூகமளித்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியைப் பாதுகாக்குமாறு, சக அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துணிச்சலான நடவடிக்கை
சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 7 அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு புதன்கிழமை (08) அன்று கொண்டுவரப்பட்டபோது, அங்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரைச் சந்தித்த அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

“அந்த அதிகாரியின் துணிச்சலான நடவடிக்கையால்தான் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு, மிகப்பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டது. எம்மைக் காப்பாற்றிய அந்த அதிகாரியைப் பற்றி ஏன் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன?” என அவர்கள் அமைச்சரிடம் வினவினர்.
“நாங்கள் அனைவரும் ஒரே சீருடை அணிந்த அணியாகச் செயல்படுபவர்கள். அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விமர்சனங்களை நிறுத்தி, அவரைப் பாதுகாக்க வேண்டும்” என்று சிறைச்சாலை அதிகாரிகள் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |