ஹெய்தியில் வெடித்து சிதறிய பெற்றோல் பவுசர்! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு
ஹெய்தியில் பெற்றோல் பவுசர் வெடித்து சிதறிய விபத்து “தேசிய பேரழிவு” என அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி (Ariel Henry) தெரிவித்துள்ளார்.
கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹெய்தியில் பெற்றோல், சமையல் எரிவாயு உட்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கிடையே, அந்நாட்டின் வடக்குப்பகுதி நகரமான கேப் ஹெய்டனில் பெட்ரோல் ஏற்றி வந்த பெற்றோல் பவுசர் ஒன்று விபத்தை சந்தித்தது.
அதிலிருந்து வெளியேறிய பெற்றோலை கண்ட அப்பகுதி மக்கள் பாத்திரங்களில் அதை அள்ளிச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததால் பவுசர் வெடித்து சிதறியது. இதில் 54 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் பிரதமர் ஏரியல் ஹென்றி கருத்து வெளியிடுகையில்,
இந்த விபத்து ஒரு தேசிய பேரழிவு. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கேப் ஹெய்டன் நகர துணை மேயர் பேட்ரிக் அல்மோனார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹெய்தி பெற்றோல் பவுசர் வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பலர் உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அப்பகுதியில் 20 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.