தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் விவாதம் நாளை
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நாளை (05) நடைபெறவுள்ளது.
நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் காலை 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காலை 10.00 மணி முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பின் யோசனை
இதன் பின்னர் காலை 11.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதுடன் மாலை 4.00 மணிக்கு இதற்கான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்காக ஆளும் தரப்பினரால் கொண்டு வரப்பட்ட யோசனை கடந்த பெப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.
குறித்த யோசனையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramarathne) 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் நடவடிக்கை முறைச் சட்டத்தின் பிரகாரம் தற்போதைய பிரதம நீதியரசர் பி.பி சூரசேன தலைமையில் சிறப்பு குழுவொன்றை நியமித்தார்.
சபாநாயகர் அறிவிப்பு
நீதியரசர் என்.பி.இத்தவெல, தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் இந்த குழுவில் இணை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த குழு சுமார் ஒன்றரை மாதகாலமாக கூடிய நிலையில் தேசபந்து தென்னகோன் குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் 2023.12.31 ஆம் திகதியன்று மாத்தறை வெலிகம டப்ள்யூ 15 ஹோட்டல் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் குழுவின் முன்னிலையில் 30 பேர் சாட்சியமளித்திருந்தனர். சிறப்புக்குழு இறுதி விதப்புரை அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்திருந்த நிலையில் அறிக்கையின் சாரம்சத்தை சபாநாயகர் கடந்த மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
சிறப்புக்குழுவின் விதப்புரையில் தேசபந்து தென்னகோன் குற்றவாளி என்று ஏகமனதாக அறிவிக்கப்பட்டு, அவரை பதவியில் இருந்து நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாளை முதல்கட்ட விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
