வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (25) காலை கருத்து தெரிவிக்கும் போதே பதில் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை கண்காணிக்கும் வைத்திய நிபுணர் குழு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த சிறப்பு வைத்திய அறிக்கையை சமர்ப்பிக்க தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாளை முடிவு
வைத்திய அறிக்கையைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுவதற்கு தகுதியானவரா என்பது குறித்து நாளை (26) முடிவு எடுக்கப்படும் என்றும் தேசிய வைத்தியசாலை பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நலம் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினர் வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

