அமெரிக்க ஆழ்கடல் தாக்குதல் கப்பல் - விஜயபாகு எனும் பெயரில் சேவைக்கு
அமெரிக்காவின் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் தாக்குதல் கப்பல் விஜயபாகு என்ற பெயரில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்த நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆழ்கடல் தாக்குதல் கப்பல்

கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி அமெரிக்காவின் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு கையளிக்கப்பட்ட P.627 எனும் இந்தக் கப்பல் கடந்த 02 ஆம் தகிதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடல் பிராந்தியங்களில் சமுத்திர சவால்களை வெற்றிகொள்வதற்கான ஒற்றுமையை பலப்படுத்துவதற்காகவும், அதனை மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றாவது கப்பல் இதுவாகும்.
115 மீற்றர் நீளம் கொண்ட இக்கப்பலின் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்துக்கு 29 கடல் மைல்கள் எனவும் சுமார் 14 கடல் மைல் தொலைவுக்கு கண்காணிப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வசதிகளும் கப்பலில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
விஜயபாகு

இதற்கு முன்னர் கடந்த 2005 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட இரண்டு கப்பல்கள் சிறிலங்கா கடற்படையிடம் 'சுமுதுரு' , 'கஜபாஹூ' என்ற பெயர்களில் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில் P.627 என்ற இந்த கப்பல் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று ‘விஜயபாகு’ என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.




