இலங்கையின் நீதித்துறையில் நிலவும் பணியிட வெற்றிடங்கள்! சட்ட சமூகத்தில் சிக்கல் நிலை
நாட்டில் நீதித்துறையில் அமைப்பில் நிலவி வரும் பணியிட வெற்றிடங்கள் தொடர்பாக சட்ட சமூகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பல மாதங்களாக நீதியரசர்களின் நியமனங்கள் தாமதமாகி வருவது நீதித்துறையின் செயல்திறனை பாதித்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது இவ்விரு நீதிமன்றங்களிலும் மொத்தம் எட்டு நீதியரசர்களின் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றங்களின் பணிச்சுமை
இந்த நீண்டகால தாமதம், அரசியலமைப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நியமனச் செயல்முறையைப் பாதிப்பதோடு, நீதிமன்றங்களின் வழக்கமான பணிச்சுமையையும் கடுமையாக பாதித்துள்ளது.

இதனுடன் இணைந்த அதற்கு கீழ் உள்ள நீதிமன்றங்களின் நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக்குப் பொறுப்பான இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு அமைப்பிலும் ஒரு உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருப்பது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா ஓய்வு பெற்றதையடுத்து, அவரது இடத்திற்கு இதுவரை புதிய உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
முழுமையான உறுப்பினர் அமைப்பு இன்றி நீதிச்சேவை ஆணைக்குழுவின் கீழ் செயல்படுவது நீதிமன்றங்களின் நிர்வாக திறன் மற்றும் ஒழுங்குமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இலங்கையின் அரசியலமைப்பு சபை
மேலும், நீதியரசர் நியமனங்களில் ஏற்படும் தாமதம் காரணமாக வழக்குகள் தேங்கும் அபாயம் அதிகரிப்பதுடன், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அரசியலமைப்பின் 107(1)ஆம் பிரிவின் கீழ், வெற்றுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கையின் அரசியலமைப்பு சபை ஆகியோரிடம் சட்ட சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசியலமைப்பின்படி, உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குச் சொந்தமானது.
எனினும், அந்த நியமனங்களுக்கு அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |