தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம்: வெடித்தது புதிய சர்ச்சை
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல் என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (30) கொழும்பில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் நீதி அமைச்சர் மேலும் கூறியதாவது:
ரணிலால் ஏற்பட்டுள்ள வில்லங்கம்
“தற்போது பிரச்சினை என்னவென்றால், முன்னாள் ஜனாதிபதி -தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபராக நியமித்தது. அந்த நியமனத்தை மேற்கொள்ளும்போது அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட்டதாக சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் மூலம் அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தேசபந்து தென்னகோன் காவல்துறை மா அதிபர் அல்ல. நீதிமன்ற உத்தரவு இன்னும் நடைமுறையில் உள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் இருக்கும் அதே வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரேரணை சமர்ப்பித்துள்ளனர்.
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், அத்தகைய பிரேரணையை அப்போது பதவியில் இருந்த காவல்துறை மா அதிபருக்கு எதிராக மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறிய சபாநாயகர்
அதன்படி, உயர் நீதிமன்றத்தால் அவர் காவல்துறைமா அதிபர் இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது அரசியலமைப்புச் சட்டத்தின், 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க சிரேஸ்ட அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்காக ஒரு குழுவை நியமிக்க வேண்டும், மேலும் அந்தக் குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இருக்க வேண்டும்.
எனவே உயர் நீதிமன்றம் அவர் காவல்துறை மா அதிபர் இல்லை என்று இடைக்கால தடை விதித்துள்ளது. மறுபுறம், காவல்துறைமா அதிபரை பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எனவே, இது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை, குறிப்பாக சபாநாயகரால், கணிசமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். ஏனென்றால் அவர்கள் செய்யப் போவது எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லாத ஒரு செயலாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
