கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு பேராபத்து!
கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டு வந்தவர்களிடையே நீரிழிவு நோய் தீவிரமடைதல் அதிகரித்து வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதித் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மலிந்த சுமணதிலக்க,
கடந்த காலங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தற்போது பாதிப்புக்கள் ஏற்படுவதை பரந்தளவில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இதில் பிரதானமானது நீரிழிவு நோயை தீவிரமடையச் செய்வதாகும்.
ஏனைய அறிகுறிகளுக்கு அப்பால் நீரிழிவு ஏற்படும் வீதம் சிலரிடம் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
சில நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளுக்கமைய சுமார் 15 வீதமானோருக்கு இவ்வாறு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளமையை இனங்காணக் கூடியதாகவுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாக முன்னர் நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு, கொரோனா தொற்றின் பின் நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளமை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.