தமிழர்களின் பொதுவான கொள்கைகள் அடங்கிய பிரகடனம் வெளியீடு
தமிழர்களின் பொதுவான கொள்கைகள் அடங்கிய பிரகடனத்தை ஆறு தமிழ் புலம்பெயர் அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ளன.
இலங்கையில் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினருக்கு ஒரு ஜனநாயக, அமைதியான, நிரந்தர மற்றும் அரசியல் தீர்வு காண அனுமதிப்பது தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட மற்றும் கண்காணிக்கப்பட்ட வாக்கெடுப்பிற்கு அமைய இந்தத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இடைக்கால சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குதல் மற்றும் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்க வேண்டுமென குறித்த கொள்கை பிரகடனப்படுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் போன்ற விடயங்களுக்காக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும், இனப்படுகொலை மற்றும் சித்திரவதைக்கு எதிரான மாநாட்டிலும் பரிந்துரைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அமெரிக்க அரசுடன் பேசுவதற்கான பொதுகொள்கைகளை அமெரிக்காவை தளமாக கொண்ட ஆறு அமைப்புகள் வரையறுத்துள்ளன.
அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதோடு இச்சந்திப்பு விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இனிவரும் காலங்களில் இலங்கை அரசு மற்றும் சர்வதேச நாடுகளுடன் பேசப்படும் பேச்சுக்களின் போது மேற்குறிப்பிட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையிலேயே பேச வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தமிழ் செயற்பாட்டுக் குழுவின் தலைவர் - சீத்தாராம் சிவம், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழுவின் தலைவர் - மீனா இளஞ்செழியன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் - விஸ்வநாதன் ருத்ரகுமாரன், இலங்கை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் - ராஜேந்திர நடராஜா, உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் - ரவி சுப்பிரமணியம், அமைதிக்கான வட கரோலினயர் அமைப்பின் தலைவர் - சாந்தினி ஜெயராஜா ஆகியோர் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.