ஹிஷாலினி வழக்கில் திடீர் திருப்பம்! தப்பினாரா ரிஷாட்டின் மனைவி? - வெளியான தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் எரிகாயங்களுக்கு உள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி ஹிஷாலினி (Hishalini) தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பில் தகவல் ஒன்றினை காவல்துறைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கு எதிராகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கு தொடரப்படவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இதுவரையில் நிரூபிக்க முடியாமல் போனதால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட மாட்டாது.
அதேவேளை ஹிஷாலினி சுவரில் எழுதிய விடயம் மற்றும் அவரது கையெழுத்து அடங்கிய கொப்பி என்பன தற்போது விசாரணை மட்டத்தில் இருந்து வருகிறது.
இந்த விசாரணை பற்றிய அறிக்கை இதுவரை மன்றில் சமர்பிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.