சிறிலங்காவின் தொல்லியல்துறை இயக்குநர் திடீர் பதவி விலகல்
சிறிலங்காவின் தொல்லியல் துறை பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுரா மனதுங்க அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவரது இராஜினாமா கடிதம் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பௌத்த கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
காரணம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் (08) இடம்பெற்று சில நாட்களுக்குள்ளேயே பேராசிரியர் அனுர மனதுங்கவின் பதவி விலகல் அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
வடக்கு மற்றும் கிழக்கில் மரபுரிமைச் சொத்துக்கள் என்ற பெயரில் மேலதிகமாக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை விமர்சித்திருந்தார்.
இந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தண்ணிமுறிப்பு, திரியாய் பிரதேசங்கள் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரித்துருப்பது தொடர்பில் சுட்டிக்காட்டினர்.
அதிபர் பணிப்புரை

இந்த விடயம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சரவைக் கொள்கையை பின்பற்றுமாறும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரிப்பதைத் தவிர்க்குமாறும் அதிபர் வலியுறுத்தியிருந்தார்.
சிறிலங்காவில் உள்ள புராதன விகாரைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அதிபர் ரணில் விக்ரமசிங்க, பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் எல்லைக் கற்களை அகற்றுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்