விமான நிலையத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட பேராபத்து - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தளர்வான விதிகளால் நாடு பேராபத்தில் சிக்கியுள்ளதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்(Ravi Kumudesh) தென்னிலங்கை ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சின் தவறான வழிகாட்டுதல்களினால் புதிய கொவிட் அலையை ஏற்படுத்திய புதிய மரபணுக்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியாது. டெல்டா, ஒமைக்ரோன் அல்லது வேறு ஏதேனும் மாறுபாடுகள் நாட்டிற்குள் நுழைவதை இலகுவாகத் தடுத்திருக்க முடியும் என்றாலும், சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரோன் அலை நாட்டை ஆட்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
நாட்டில் கொவிட் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதனால் கொவிட் முடிந்துவிட்டது என்று நினைத்ததன் விளைவுகளை நாடு இப்போது அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் கொவிட் தொற்று வரம்பை மீறிவிட்டது. பி. சி. ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனை வசதிகள் இல்லை. சுகாதார அமைச்சில் உள்ள பிரச்சினைகளை விவாதிக்க இடமில்லை. கேட்பதற்கு ஆள் இல்லை.
டிசம்பர் முதல் வாரத்தில் முதல் 'ஒமைக்ரோன்' தொற்று கண்டறியப்பட்டது. தடுப்பூசி போடாத தம்பதிகள் தான் 'ஒமைக்ரோன்' என்ற தொற்றை இலங்கைக்கு கொண்டு வந்தனர். விமான நிலையத்தில் உள்ள தளர்வான விதிகளே இதற்குக் காரணம்.
அப்போது கசினோ விளையாட வந்த இந்தியர் ஒமைக்ரோனுடன் நாடு முழுவதும் சுற்றித்திரிந்தார்.யாரும் எந்த சோதனையும் செய்யவில்லை. இப்போது நாடு முழுவதும் ஒமைக்ரோன் பரவிவிட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.