கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை : எச்சரிக்கும் சுமந்திரன்
நடைபெற்று முடிந்த தேர்தல்களில் கட்சியினுடைய தீர்மானங்களை மீறி கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பபட்டுள்ளதுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து விலக்கப்படுவார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பாறை - ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
விளக்கம் கோரி கடிதம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள் சம்மந்தமாக கட்சியினுடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாக எங்கள் கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர்.
அதேவேளை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட சிலர் எங்கள் கவனக்குறைவால் தப்பியுள்ளனர் அவர்களுடைய பெயர்களும் சொல்லப்பட்டுள்ளது. அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். விளக்கம் கோரி எழுதிய கடிதங்களுக்கு சிலர் பதில் எழுதாமல் இருக்கின்றனர் சிலர் பதில் எழுதி இருக்கின்றனர்.
ஆகவே பதில் எழுதாதவர்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அதை அவர்களுக்கு அறிவிக்கின்றோம். அதற்கு மேலதிகமாக விளக்கம் எழுதப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்.
ஒழுக்காற்று நடவடிக்கை
அதேவேளை விளக்கம் எழுதியவர்கள் தொடர்பாக அவர்களது விளக்கத்தை ஆராய்ந்து அவர்களை கட்சியின் ஒழுக்காற்று முறைமைக்குள் அவர்கள் குற்றம் செய்தவர்களாக இருந்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் அவர்களை கண்காணிப்பது அல்லது ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருந்தால் கொடுப்பது என்ற கருத்துக்கள் நிலவி இருக்கின்றன. அது தொடர்பாக ஒவ்வொரு விடயங்களை எடுத்து வெளிப்படுத்துவோம்.
கட்சிக்கு எதிராக செய்யப்பட்டிருக்கின்ற வெவ்வேறு நடவடிக்கை தொடர்பாக பேசப்பட்டது. இதில் ஒரு சிலர் கட்சிக்கு சில முறைப்பாடுகள் கொடுத்துள்ளனர். முறையற்ற முறைப்பாடுகளும் வந்திருக்கிறது. அதற்கு பதில் அளிப்பதாக தீர்மானித்திருக்கின்றோம்.
அது சம்பந்தமாக செயற்படுகின்றவர்கள் குறித்து கட்சி தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கும். கட்சி நீண்ட கட்டுப்பாட்டுடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கட்டுக் கோப்புடன் கட்சி செயற்பட வேண்டும் என்ற கருத்து அனைவராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே கட்சியின் கட்டுப்பாடு சம்மந்தமாக மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கட்சி தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றவர்களுக்கு எதிராக கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என தீர்மானித்துள்ளோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
