யாழ் மாவட்டத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் - எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
யாழ் மாவட்டத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 25 ஆம் திகதி மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது வறட்சி தொடர்பாக ஆராயப்பட்டதுடன் வறட்சியில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக நீர்நிலைகளை தூர்வாருதல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், மாகாண விவசாயப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வைத்திய அதிகாரி, நீர்ப்பாசன பொறியியலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக பிரதிநிதி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் பிரதிநிதி, கடற்படைப் பிரதிநிதி மற்றும் உலக உணவுத்திட்ட அலுவலர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
குடிநீர்ப் பற்றாக்குறை

யாழ்ப்பாண மாவட்டத்தில் 70408 நபர்களைக் கொண்ட 22044 குடும்பங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, மருதங்கேணி, சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர்ப் பற்றாக்குறையான பகுதிகளுக்கு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நிதி உதவியுடன் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் குடிநீர்த் தேவையுடைய குடும்பங்களின் தொகை அதிகரிக்கக்கூடும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டுமெனவும் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன் போது நெடுந்தீவு உட்பட தங்களால் நீர்வழங்கல் செய்யப்படும் பிரதேசங்களிற்கு குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கக் கூடிய வகையில் நீர்வழங்கலை மேற்கொள்ள முடியுமெனவும் தற்போது மாவட்டத்தில் அவ்வாறான சேவைகள் 18 குடிநீர் மூலங்கள் மூலமாக செயற்படுவதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் தெரிவித்தார்.
நீர்நிலைகளை துப்பரவு செய்தல்

எதிர்வரும் கால வறட்சியினை கருத்திற் கொண்டு நீர்ப்பாவனையில் விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக நீரைப் பாவிக்க பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை யாழ் மாவட்டத்திலுள்ள சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை இன்று (28) முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மேற்பார்வையில் அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான பிரதேச சபைகள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் போன்றன நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
யாழ் நகரப் பகுதியிலுள்ள இயற்கையான குளங்கள் மற்றும் கேணிகளை தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான திணைக்களங்களால் உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டுமென யாழ் மாவட்ட செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டது.
யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட தூர்வாரப்படாத குளங்கள் மற்றும் கேணிகளை மாநகர சபை பொறியியலாளரின் மேற்பார்வையின் கீழ் பொது அமைப்புகள் மற்றும் தனியார் மூலமாக தூர்வாரி சுத்தப்படுத்த முடியுமெனவும் அதற்கு சில நிறுவனங்கள் தாமாகவே முன்வருவார்களெனவும் யாழ்ப்பாண பிரதேச செயலாளரினால் குறிப்பிடப்பட்டது.
மேலும் மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள இவ்வாறான கேணிகளையும் நீர் நிலைகளையும் துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பொதுக்கிணறுகள், விவசாய கிணறுகள் பல பாழடைந்து பயன்பாடற்று காணப்படுவதாலும் அவற்றை சுத்தப்படுத்தினால் குடிநீர்த் தேவைக்கு அவற்றைப் பயன்படுத்த முடியுமெனவும் எதிர்காலத்தில் நன்னீரை சேமித்துவைக்க அவற்றை பயன்படுத்த முடியுமெனவும் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய இவ்வாறான கிணறுகள் பற்றிய விபரங்களை ஒரு வார காலத்தினுள் சமர்ப்பித்து வறட்சியினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவ்வப் பிரதேச மக்களுக்கு வேலைக்காக உணவு பெறும் திட்டத்தினூடாக அக் கிணறுகளை துப்புரவு செய்வதற்கான சாத்தியம் பற்றி ஆராயுமாறு உலக உணவுத்திட்ட அலுவலரிடம் அரசாங்க அதிபரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.