டித்வா சூறாவளி தொடர்பான அரசாங்கத்திற்கு எதிரான மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு
"டித்வா" சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பூர்வாங்கத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி பரிசீலனைக்காக அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் கருத்திற்கொள்ளப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை
மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"டித்வா" சூறாவளி நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான முறையான பூர்வாங்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடு காரணமாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான முறையான வழிகாட்டுதல்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறும் அந்த மனுவின் ஊடாக மேலும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |