செம்மணியில் மீட்கப்படும் என்புக்கூடுகள் தொடர்பில் DNA பரிசோதனை : அமைச்சர் அறிவிப்பு
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் என்புக்கூடுகள் தொடர்பான டி.என்.ஏ பரிசோதனைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்ற அமர்வின் போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கிருசாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் மறைக்கப்பட்ட விடயங்களை எமது அரசாங்கம் தான் வெளிப்படுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட என்புக்கூடுகள்
கடந்த 25 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தவர்கள் எவரும் இந்த விடயங்களை வெளிப்படுத்தவில்லை. உண்மையை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. உண்மையை நாங்கள் வெளிப்படுத்துவோம். எதனையும் மறைக்கவேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 409 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த விவகாரம் குறித்து முழுமையான விடயங்களை வெளிப்படுத்த முடியாது. மருத்துவ பரிசோதனை மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நீதிமன்றத்துக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனோரின் உறவுகளிடமிருந்து ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சி பணிகள் மற்றும் அடையாளப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம்
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஒன்றிணைந்து நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளது. அதுபோலவே தேசிய மட்டத்தில் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் தூதரகங்களுக்கும் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. டி.என்.எ பரிசோதனைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.

தற்போது முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சி பணிகளை நிறைவுபடுத்தாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல முடியாது.
செம்மணி மனிதப் புதைகுழி இடத்துக்கு நான் கடந்த வாரம் நேரடியாக சென்றேன். இந்த பணிகள் மிகவும் விரிவானது மற்றும் உணர்வுபூர்வமானது என்பதை விளங்கிக்கொண்டேன்.
மக்கள் உண்மைக்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் உண்மையை நிச்சயம் வெளிப்படுத்துவோம். எவரையும் பாதுகாக்கவோ, உண்மையை மறைக்கவோ வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்