ஈரான் மீதான தாக்குதல்கள் இடைநிறுத்தம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்பைத் தாக்குவதற்கு வோஷிங்டனும் இஸ்ரேலும் தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, சனிக்கிழமை இரவு தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்ப் இந்த முடிவை அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத இராணுவ பயங்கரவாதம், வலிமை மற்றும் சக்தியின் அளவுகளில், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகப் போரிட அமெரிக்கா ஆயத்த நிலையில் உள்ளது.
பாதுகாப்பு வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்! உக்ரைனை தாக்கிய ரஷ்யாவின் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள்
ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு
எனினும் நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியுள்ளன.
இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை இரத்து செய்ய நான் சம்மதித்துள்ளேன்.
இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் இணைகிறது” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர்
இதேவேளை ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |