கொன்றவனே தடயம் தேடும் நாடு
தேடும் நாடு கடந்த ஆனி மாதம் 29 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் பகுதியில் வடிகாலமைப்பிற்காக அகழ்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, பெண் போராளிகளது எனச் சந்தேகிக்கப்படும் மனித எச்சங்களும், பெண்களுக்குரிய ஆடைகளும் கண்டெடுக்கப்பட்டன.
அன்றிலிருந்து அடுத்து வந்த சில நாட்களில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அகழ்வாய்வின் போது 13 மனித எச்சங்கள் கண்டுக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இவ்விடத்தில் பாரிய மனிதப் புதைகுழி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு, அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இது குறித்து முன்னெடுத்த வழக்கில், தொல்லியல் திணைக்களம், காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்கான அலுவலகம், மருத்துவ அதிகாரிகள், சட்டத்தரணிகள் கலந்துகொண்டு, பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த அகழ்வினை மேற்கொள்வதற்கு நிதியைப் பெறுவதில் சிக்கல் இருந்தபோதிலும், இறுதியில் இதற்கான நிதியை அரசு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஊடாக ஒதுக்கியது.
அதன் பின்னர், மன்னார் சதொச மனிதப் புதைகுழியை அகழ்வுசெய்த அதே இலங்கை தொல்லியல் திணைக்கள அகழ்வாய்வாளர்கள் இந்த மனிதப் புதைகுழியையும் அகழ்வாய்வு செய்ய உடன்பட்டனர். நாளையில்(6) இருந்து அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின்றன.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி குறித்த சந்தேககங்கள்
கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்தச் சடலங்கள் யாரினுடையதாக இருக்கலாம் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் பெண் போராளிகளைக் கொன்று புதைத்திருக்கலாம் என ஒருசாரார் கருத்துவெளியிட்டனர்.
பேருந்துகளில் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட பெண் போராளிகள் அணிந்திருந்த பச்சை நிற காக்கிகளும், அதே பேருந்துகளில் ஆசனங்களுக்குக் கீழ் கிடத்தப்பட்டிருந்த பொலித்தீன் பைகளை ஒத்த பொலித்தீன்களையும் வைத்து கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் இவர்கள்தான் என்கிற முடிவுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டவர்கள் வந்திருந்தனர்.

இன்னொரு தரப்பினரோஇ இவை 1990 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஐந்து முகாம் தாக்குதலின்போது கொல்லப்பட்ட போராளிகளது சடலங்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டனர்.
ஆனால் இந்தக் கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் துணிகளோ, பிற பொருட்களோ காணப்படவில்லை. இலகுவில் உக்கி அழிந்துவிடக்கூடிய துணியானது கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக சிதைவடையாத நிலையில் மண்ணினுள் இருப்பது சாத்தியமற்றது.
எனவே அண்மைக்காலத்தில் புதைக்கப்பட்டவைகளாகவே இந்தப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்பதே பொருத்தமானது.
கடந்த வருடம் முகமாலையில் மீட்கப்பட்ட பெண் போராளிகளது மனித எச்சங்களோடு மீட்கப்பட்ட துணிகளுக்கும், கொக்குத்தொடுவாயில் மீட்கப்பட்ட துணிகளுக்கும் பெரியளவு வித்தியாசங்கள் இருக்கவில்லை.
காணாமலாக்கப்பட்டவர்களை மனிதப் புதைகுழியோடு தொடர்புபடுத்தலாமா?
கடந்த 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு முழுவதிலுமிருந்து இணைந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னார் சதொச மனிதப் புதைகுழியிடத்திலிருந்து போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அதேபோல கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியை விரைவாக அகழ்வு செய்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையினை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திய போராட்டத்திலும் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
இறுதிப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த, உறவுகளால் கையளிக்கப்பட்ட, இராணுவம் கைதுசெய்த பொதுமக்களை, முன்னாள் போராளிகளை மனிதப் புதைகுழியிடத்தில் தொடர்புபடுத்துவது சரியானதா? உயிரோடு கையளித்தவர்களை எவ்வாறு மனிதப் புதைகுழியிடத்தில் தேட முடியும்? அவர்களைக் கொன்று இவ்விடத்தில் தான் புதைத்தோம் என அரசு ஒப்புக்கொண்டால், கொல்லப்பட்டவர்களுக்கான நீதி என்னவாகும்? அரசுக்கு இருக்கும் பொறுப்புக்கூறல் என்னவாகும்? வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு எவ்விதத்திலாது மரணச் சான்றிதழை வழங்கிவிட வேண்டும் என பல்வேறு வேலைத்திட்டங்களில் இறங்கியிருக்கும் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு இது இலகு பாதை அமைத்த மாதிரியல்லவா போய்விடும்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எனக் கோரி வீரியத்தோடு போராடிவரும் சாட்சியங்களை மரணச் சான்றிதழுக்கு அருகில் அழைத்துவரும் உளவியல்போதை இந்தப் புதைகுழிகள் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன என்பதையும் உணரல்வேண்டும்.
புழுதியிலும், வெயிலிலும், மழையிலும் போராடிப் போராடியே உள அழுத்தம், இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு, அல்சர் எனப் பல நோய்களுக்கு உள்ளாகியிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை இந்தப் புதைகுழி விவகாரம் மேலும் துயருக்குள்ளாக்கியிருக்கிறது.

ஏதாவது ஒரு வழியில் தம் பிள்ளை, தன் கணவன், தன் தந்தை வந்துவிடுவார் எனப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு இங்கெல்லாம் புதைக்கப்பட்டிருப்பது அவர்களோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசுக்கு இப்போது இருக்கும் ஆகப்பெரிய தலையிடி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளது தொடர் போராட்டம்தான். இவ்வாறான நெருக்குதல்களைக் கொடுத்து போராடுபவர்களைக் கொன்றுவிட்டால், இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடுமல்லவா? ஏற்கனவே இதுவரை காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடிப் போராடிக்கொண்டிருந்த 187 பேர் வரையில் இறந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்தில் நீதிகோரி போராடவேண்டிய பல தரப்புகள் இருக்கின்றன. மனித உரிமை அமைப்புகள், தமிழ் தேசிய அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகள், உண்மையின் பக்கம் நிற்கும் ஊடகங்கள்இ, சட்டத்தரணிகள், பல்சமய அமைப்புகள் எனப் பலருக்கும் பொறுப்பிருக்கின்றது.
இந்தத் தரப்பினர் தமக்கிருக்கும் கூட்டுப்பொறுப்பைக் கவனியாது தவிர்த்து, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை முன்னிறுத்தி, மனிதப் புதைகுழிக்கு நீதிகோருவதானது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பணிகளையே இலகுபடுத்தும்.
சிறிலங்கா தொல்லியல் திணைக்களம் பொருத்தமானதா?
சிறிலங்கா தொல்லியல் திணைக்களம் என்றால் தமிழர்களுக்கு இலகுவில் நினைவுக்கு வருவது, அத்திணைக்களம் வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள்தான்.
தொல்லியல் திணைக்களம் என்றால் தமிழர் இடங்களை அபகரித்து, பௌத்த பிக்குகளின் பின்னணியில் விகாரைகளை அமைக்கும் அரச நிறுவனம் என்ற பிம்பம் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் தமிழர்கள் நீதிகோரும் ஒரு விடயத்தினை அத்திணைக்களம் கையாளுவது எவ்வளவுக்குப் பொருத்தமானது? ஏற்கனவே மன்னார் சதொச மனிதப் புதைகுழி விடயத்திலும் தொல்லியல் திணைக்களமே அகழ்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் உருவான பிஸ்கட் பைகள், மன்னார் – சதொச மனித எலும்புக்கூடுகளுடன் மீட்கப்பட்ட போதிலும், அந்த எலும்புக்கூடுகள் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட மத பூசல்களால் கொல்லப்பட்டவர்களினது என்கிற முடிவுக்கே அகழ்வாய்வாளர்கள் வந்திருந்தனர்.
மனித எச்சங்களை காலக்கணிப்புக்குட்படுத்தும் அமெரிக்க நிறுவனமே அதனைப் பரிசோதித்து சொன்னது என்றும் செய்தி சொன்னார்கள். ஆனால் அமெரிக்க ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பபட்டவை மன்னார் - சதொச மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்தானா? என்கிற கேள்வி இன்னமும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் உண்டு.
இதற்கும் தேவை சர்வதேசக் கண்காணிப்பு
ஆகவேதான், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்விற்கு சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நிபுணத்துவ பங்குபற்றல் குறித்துப் பலரும் வலியுறுத்துகின்றனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கங்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என அனைத்துமே இதனை வலியுறுத்திவிட்டன.

ஆனால் அது குறித்து கவனத்திலெடுக்காத இலங்கை அரசு காணாமலாக்கப்பட்ட உறவுகள் நிராகரித்து விட்ட அமைப்பான காணாமல் போனார் தொடர்பான அலுவலகத்தையும், தமிழர்கள் துளியளவும் நம்பாத – விரும்பாததொல்லியல் திணைக்களத்தையும் வைத்துக்கொண்டு அகழ்வுப் பணியை ஆரம்பித்திருக்கின்றது.
எனவே இதுவும் கொன்றவனே தடயம் தேடும் முயற்சிதான்.
YOU MAY LIKE THIS
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்