சிறீதர் தியேட்டரில் மனித புதைகுழி - டக்ளஸ் தரப்பு விடுத்துள்ள சவால்
சிறீதர் தியேட்டரில் மனித புதைகுழிகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் சில செய்திகளை காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறு புதைகுழி விவகாரத்துடன் ஈ.பி.டி.பி. தொடர்புபடுத்த விரும்புகின்றவர்களுக்கு ஒரு சவால் விடுக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (Eelam People's Democratic Party) ஊடகச் செயலாளர் சிறிகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
செம்மணி தொடர்பிலும், கடற்றொழிலாளர்கள் தொடர்பிலும் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை கடிதத்தில் இதனை கூறியுள்ளார்.
செம்மணி மனித எச்சங்கள்
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாவது, “செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற அகழ்வுப் பணிகளில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் அகழப்பட்டு வருகின்றன.
எமது பிரதேசத்தில் யுத்தம் நிலவிய காலத்த பல்வேறு மனிதப் புதைகுழிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. இதில் பல்வேறு தரப்புக்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றன என்ற தகவல்களும் இருக்கின்றன.
இவை தொடர்பாக கடந்த காலங்களில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் யார் என்பது வெளிக் கொண்டு வரப்படாத நிலையில், செம்மணியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின் அகழ்வுப் பணிகளும், அங்கு மீட்கப்படுகின்ற மனித எச்சங்களும், புதைகுழி விவகாரத்தினை மீண்டும் பேசு பொருளாக மாற்றி இருக்கின்றது.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் எமது மக்களிடையே நிலவுகின்ற குழப்ப நிலையை மேலும் தூண்டிவிடுவதாக சில சுயலாப அரசியல் சக்திகளின் கருத்துகளும், செயற்பாடுகளும் அமைந்து வருகின்றன.
எனவே, மேற்படி விடயம் தொடர்பில் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை தொடர்ச்சியான முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறீதர் தியேட்டர்
செம்மணி மாத்திரமல்ல, மன்னார், கொக்குளாய், துணுக்காய், மண்டை தீவு என்று எங்கெல்லாம், மனித புதைகுழிகள் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம், அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். மனித எச்சங்கள் மீட்கப்படுமாயின் அவை எந்தக் காலப் பகுதியில் புதைக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டு சம்ந்தப்பட்டவர்கள் யார் என்பதும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
சிறீதர் தியேட்டரில்கூட மனித புதைகுழிகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் சில செய்திகளை காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறு புதைகுழி விவகாரத்துடன் ஈ.பி.டி.பி. தொடர்புபடுத்த விரும்புகின்றவர்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம்.
அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள், மண்டைதீவிலே புதைகுழிகள் இருப்பதாகவும் அதுதொடர்பாக எமது செயலாளர் நாயகத்திற்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த, நீதி அமைச்சர், வெறுமனே செவி வழிச் செய்திகளை வைத்து கதை சொல்லுவதை விடுத்து, ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் விசாரிக்கிறோம் என்று சொல்லி இருக்கின்றார்.
எனவே சிறீதர் தியேட்டரில் புதைகுழி இருக்கின்றது ஈ.பி.டி.பி. மக்களை கொலை செய்து புதைத்தது சமூக ஊடகங்களில் கருத்துக்களை பரவ விடுகின்றவர்கள் உரிய முறையிலே முறைப்பாடுகளை பதிவு செய்யலாம். அதனை ஈ.பி.டி.பி. ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
கிளீன் சிறிலங்கா
கிளீன் ஸ்ரீலங்கா என்ற மகுட வாக்கியத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஆட்சிக் காலத்தில் ஈ.பி.டி.பி. கிளீனான அரசியல் கட்சி என்ற வெளிப்படுத்தப்படும், எம்மீது அரசியல் நோக்கங்களுக்காக பூசப்பட்டு வருகின்ற அனைத்து சேறுகளும் கழுவப்படும் என்று நம்புகின்றோம்.
அந்த அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்கவிற்கு எமது செயலாளர் நாயகத்தினால் இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதில் ஒரு கடித்ததில் ஏற்கனவே கூறியது போன்று, புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதுடன்,
இன்னுெமொரு கடிதத்தில், கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில், எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட தொழிர்சார் பாதிப்புக்களை குறைக்கும் நோக்கில் கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்ற மண்ணெண்னை டீசல் போன்றவற்றுக்கு லீற்றர் ஒன்றிற்கு 25 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது.
அந்த திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பதால், அவ்வாறான ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தி கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
