இலங்கையில் சுற்றுலாக் கொத்தணி உருவாகும் - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சுற்றுலாத்துறை கொத்தணி உருவாக வாய்ப்புள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாசபை தயாரித்த கொள்கைக்கு முரணாக சுற்றுலாத்துறை சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மீள கட்டியெழுப்ப சுற்றுலாசபை தயாரித்த திட்டத்திற்கு முரணாகவே சுற்றுலாத்துறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்திய நாடுகளில் இருந்து மாத்திரமே சுற்றுலாப்பிரயாணிகளை நாட்டுக்கு அழைத்து வர சுற்றுலாசபை திட்டம் வகுத்தது. சுற்றுலா சபை தயாரித்த திட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தியுள்ள நாடுகள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நாடுகளின் பட்டியலில் உக்ரைன் நாடு குறிப்பிடப்படவில்லை. உக்ரைன் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரையில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். எமது நாட்டு சனத்தொகையில் ஒரு மில்லியனுக்கு ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றிறால் இறக்கின்ற நிலையில், உக்ரைன் நாட்டு சனத்தொகையில் ஒரு மில்லியன் பேரில் 430 பேர் இறக்கின்றனர்.
எந்த நாடும் கொரோனா வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளது என உலக சுகாதார தாபனம் அறிவிக்கவில்லை. சுகாதார பாதுகாப்பினை பின்பற்றி சுற்றுலா சேவையில் ஈடுப்பட சுற்றுலாத்துறை சேவையாளர்கள் தயார் நிலையில் உள்ள போது பிற தரப்பினர் அரசியல் செல்வாக்குடன் சுற்றுலாத்துறை சேவையில் தற்போது ஈடுப்படுகிறார்கள்.
உதயங்க வீரதுங்க அலரி மாளிகையின் விலாசத்தை தனது உத்தியோகபூர்வ விலாசமாக குறிப்பிட்டு சுற்றுலாத்துறை சேவையில் ஈடுப்படுகிறார். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சுற்றுலாத்துறை ஊடாக கொரோனா வைரஸ் கொத்தணி தோற்றம் பெறும் அபாயம் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் சுகாதார தரப்பினர் எதற்கு. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகள் பொறுத்தமற்றதாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. மறுபுறம் நாட்டு மக்கள் சிறை கைதிகளை போன்று பார்க்கப்படுகிறார்கள்.
உயர்வர்க்கத்தை திருப்திப்படுத்த அரசாங்கம் பல வரிச்சலுகைகளை வழங்கியது. இதன் தாக்கத்தை இவ்வருடம் எதிர்க்கொள்ள நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.