மட்டக்களப்பில் உழவு இயந்திரம் தடம்புரண்டு சாரதி உயிரிழப்பு
மட்டக்களப்பு - வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டதால் அதன் சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுணதீவு - பாவக்கொடிச்சேனையில் இன்று (21) காலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 51 வயதுடைய முத்துப்பிள்ளை கருணாநிதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்டார்
குறித்த நபர் சம்பவ தினமான நேற்று (20) வீட்டில் இருந்து பழங்குடியிருப்பு மடு பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றை உழுது பயன்படுத்துவதற்காக உழவு இயந்திரத்துடன் சென்றிருந்தார்.
இரவாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் அவரைத் தேடி இன்று காலையில் சென்ற போது உழவு இயந்திரம் தடம் புரண்ட நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
