தமிழரசுக் கட்சி வசமான வலி வடக்கு பிரதேச சபை
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வலி வடக்கு பிரதேச சபைக்கான கன்னி சபை அமர்வு இன்று (18) பிற்பகல் 2.30 மணியளவில் வலி வடக்கு பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது.
இந்த நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் வேட்பாளராக சோமசுந்தரம் சுகிர்தனும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பத்மநாதன் சாருஜனும் போட்டியிட்டனர்.
பகிரங்கமாக நடைபெற்ற தவிசாளர் தெரிவில் சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும் பத்மநாதன் சாருஜன் 09 வாக்குகளையும் பெற்றனர்.
இந்நிலையில் வலி வடக்கு பிரதேசசபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வலி கிழக்கு பிரதேச சபையில் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கு கூட்டணி
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் (Vali-East Pradeshiya Sabha) தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றையதினம் (18) வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இரகசிய முறையிலான வாக்கெடுப்புக்கு சபையின் 36 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில் முதலாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
திருவுளச்சீட்டு முறை
இதில் முதல் நிலை பெற்ற வேட்பாளர் பெரும்பான்மைக்குரிய வாக்கை எட்டாததால் இரண்டாம் சுற்று தெரிவு இரகசியமா பகிரங்கமா என்பது தொடர்பான வாக்கெடுப்பு சமமாக வந்த நிலையில் திருவுளச்சீட்டு முறைமூலம் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதனடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று சங்கு, சைக்கிள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
உபதவிசாளர் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு முறைமூலம் நடத்தப்பட்ட நிலையில் சங்கு சைக்கிள் கூட்டணியின் உறுப்பினரான ஜனர்த்தனன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


