தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட சங்கு கூட்டணி தயார் : சி.வி.கே அறிவிப்பு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்த வரையில் முதன்மைக்கட்சியாக இருந்தாலும் கூட தமிழ் தேசிய கட்சிகளை இணைத்துக்கொண்டு பயணிக்கவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டும். அந்த பொறுப்பினை நாங்கள் இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பித்தோம்.
எங்களுடன் இணையுமாறு அழைப்பு
கடந்த உள்ளூராட்சிமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களின்போது எதிரும் புதிருமாக நின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம். அதில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்துவங்களைப் பேணிக்கொண்டு செயற்படுவது என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.

மீண்டும் எங்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள் என நானும் பொதுச்செயலாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். அந்த அழைப்பினை தொடர்ந்து ஜனநாயக தேசிய கூட்டணியை பொறுத்தவரையில் அவர்கள் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. பரந்த மனப்பான்மையுடன் எங்களுடன் பேசினார்கள்.
அவ்வாறானதொரு நிபந்தனையற்ற இணைவுகள் ஏனையவர்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
சிங்கள தேசிய கட்சிகளின் தலைமைகளுக்கு எந்த கட்சியும் எங்களுக்கு விடிவு தராது. அவர்களது கட்சிக்குள் எங்களது மக்களும் ஊடுருவி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு சிங்கள தலைமைகளுக்கு மேலாக செல்லமுடியாது” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |