தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் : வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட துமிந்த
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை (Duminda Dissanayake) அவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்கு நேரடி மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் இல்லாததால், துமிந்த திசாநாயக்கவை விடுவிக்க நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டார்.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி
ஹெவ்லொக் நகரில் உள்ள ஆடம்பர வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையில், கடந்த மே 23 ஆம் திகதி துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.
பின்னர், பிணை மனு பரிசீலிக்கப்பட்டு, ஜூலை 14 ஆம் திகதி நிபந்தனைகளின் பேரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று குறித்த வழக்கிலிருந்து துமிந்த திசாநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
