உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- சஹ்ரானின் சகோதரி உட்பட 63 பேர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காணொளி மூலமாக இடம்பெற்ற விசாரணையின் போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டார். 63வது சந்தேக நபரான மொஹமட் ஹில்மி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளர்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர்.
அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் நாட்டிலுள்ள பொலநறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்களை தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாததன் காரணமாக காணொளி மூலமாக நடைபெற்ற விசாரணையில் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.