புலிகள் பக்கம் விசாரணையை திருப்பி விட்ட காவல்துறை அதிகாரி: சிஐடி வெளியிட்ட அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு பிரிவு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக 72 மணி நேரம் காவலில் வைக்கப்படுவார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பானது, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் நடந்த இரண்டு வவுணதீவு காவல்துறை அதிகாரிகள் கொலை தொடர்பான விசாரணையைத் தடுத்த குற்றச்சாட்டில், கந்தளாய் வான் எல காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை பரிசோதகரை சிஐடி கைது செய்துள்ளது.
கொலை சம்பவம்
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மட்டக்களப்பு பிரிவு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் முன்னர் பணியாற்றியுள்ளார்.
நவம்பர் 29, 2018 அன்று, வவுணதீவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் துறை கான்ஸ்டபிள் நிரோஷன பிரசன்ன உடுகம மற்றும் கான்ஸ்டபிள் கணேஷ் தினேஷ் ஆகியோர் காவல் நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு காவல் துறை வீதித் தடையில் பணியில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காவல் துறை கான்ஸ்டபிள் நிரோஷனவின் உடல் காவல் துறை வீதித் தடைக்கு அருகிலுள்ள ஒரு காவலர் இல்லத்தில் படுக்கையில் கிடந்தது, அதே நேரத்தில் காவல் துறை கான்ஸ்டபிள் தினேஷின் உடல் காவல் நிலையம் அருகே ஒரு கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சஹாரான் குழுவினர்
இந்தநிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி உட்பட ஒரு குழு பொய்யான ஆதாரங்களை உருவாக்கி, கொலைக்கு விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்த விசாரணையைத் தடுத்ததுள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், வவுணதீவு காவல்துறை அதிகாரிகள் இருவரின் கொலையும் ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய சஹாரான் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பின்னர் வெளிப்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
