உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 'பி' அறிக்கை : அரச தரப்பிடம் கேள்வி
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் 43 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் (Nizam Kariapper) தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த வாக்குமூலம் தொடர்பான 'பி' அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் இந்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்காமலிருப்பதற்குரிய காரணம் என்னவென்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிசாம் காரியப்பர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பதிலளித்த ஆனந்த விஜேபால
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “2025.01.07 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கேள்வியெழுப்பப்படுகிறது.
35882 -24 இலக்க வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 43 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்திருந்தார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய 'பி'அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு நான் முயற்சித்தேன். இருப்பினும் என்னால் அந்த அறிக்கையை ஆரம்பத்தில் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை
சுரேஷ் சாலியின் சட்டத்தரணியும் இந்த 'பி' அறிக்கையை பெற்றுக்கொள்ள கோரியிருந்தார். அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டதற்கமைய 43 பேரின் வாக்குமூலத்தின் சாரம்சம் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
தண்டனைச் சட்டக்கோவையின் 115 ஆவது பிரிவின் பிரகாரம் ஏதேனும் 'பி' அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்னர் அந்த விசாரணையின் முன்னேற்றத்தை விசாரணை அதிகாரிகள் நீதவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இருப்பினும் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தின் சாராம்சம் நீதவானுக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.
43 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டு ஏன் அவற்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை என்ற பிரச்சினை காணப்படுகிறது .இதில் காணப்படும் இரகசியம் என்னவென்பதை அறிய முடியவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் வெளிப்படுத்திய விடயங்கள் குறித்து அரசாங்கம் எவ்வித அவதானமும் செலுத்தசவில்லை. அலட்சியப்படுத்தும் போக்கில் செயற்படுகிறது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
