தமிழர்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை ஆதரவு!
ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயக உரிமைப் போராட்டத்தின் ஒரு மைல் கல்லாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகளாலும், தமிழ் அரசியல் கட்சிகளினாலும் முன்னெடுக்கப்படவிருக்கின்றது.
இப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை தனது முழு ஆதரவை வழங்குகின்றது என அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேலும் கோட்டாபய அரசாங்கம் நாட்டின் முழு ஆட்சியையும் நிர்வகிக்க தொடங்கியதன் பின்னர் ஏற்கனவே தமிழ் மக்களுக்கு பிரச்சனையாக இருந்து வருகின்ற தொல்லியல் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் , மகாவலி அதிகார திணைக்களம், வனவளத்துறை திணைக்களம், போன்றவை இந்த அரசின் மூலம் தனது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சகட்ட நிகழ்ச்சி நிரலை தமிழர் தாயகத்தில் அடாத்தாக சட்ட விதிமுறைகளுக்கு முறனாக அரங்கேற்றி வருகின்றார்கள்.
எனவே சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் தமிழர்களுடைய சொந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு, தமிழர்களுடைய பாரம்பரிய மத அடையாளங்கள், தொல்லியல் நினைவுச் சின்னங்கள் அழிப்பு, தமிழ் மொழி புறக்கணிப்பு போன்ற நிகழ்வுகளையும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம், மலையக தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பாகவும் இலங்கை அரசை கண்டித்தும், சர்வதேசத்தில் ஈழ தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நடைபெற இருக்கும் இந்த ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு தமிழர் தாயகத்தின் அனைத்து தமிழ் பேசும் உறவுகளையும்
தமிழ் தேசியத்திற்கான அமைப்புக்களையும், இளைஞர்களின் கிராமமட்ட அமைப்புக்களையும், விளையாட்டுக் கழகங்களையும், சைவ,கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புக்களையும், வர்த்தக சங்கங்களையும், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம், முச்சக்கரவண்டி சங்கம், தனியார் பேருந்து சங்கங்கள் என தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் கலந்து உங்கள் ஒவ்வொருவரினதும் தார்மீக கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை அறைகூவல் விடுக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.